கருப்பு ஜூலையின் 43வது ஆண்டை நினைவு கூர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி அறிக்கைஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்…..
இன்று நாம் கருப்பு ஜூலையை நினைவுகூர்கிறோம்.
இலங்கையில் கொடூரமான 1983 கருப்பு ஜூலை இனவன்முறைக்கு 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அப்போது தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வன்முறையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதுடன், எண்ணற்ற வீடுகளும் வணிக நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த வன்முறை, தமிழர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்தது.
இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, அரசின் ஆதரவுடன் இடம்பெற்ற வன்முறை எனக் கூறப்படுகின்றது. இருப்பினும், இதுவரை அதற்குப் பொறுப்பானவர்கள் எவரும் முழுமையாக நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
கருப்பு ஜூலைக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் கனடா அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, 1,800-க்கும் மேற்பட்ட தமிழர்களை கனடாவிற்கு வரவேற்றது. அந்தக் காலத்தில் தப்பிப் பிழைத்தவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இன்று ஸ்கார்பரோ—கில்ட்வுட்—ரூஜ் பார்க் தொகுதியிலும், கனடா முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்-கனடியர்கள் தொழில்களை உருவாக்கி, குடும்பங்களை வளர்த்து, தங்கள் சமூகங்களையும் கனடா நாட்டையும் வளப்படுத்தியுள்ளனர்.
இன்று, பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்வதோடு, அந்த வரலாற்றின் பாரத்தை நாள்தோறும் சுமந்தபடி வாழ்ந்து வரும் உயிர் தப்பியவர்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம்.
2023 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலை என கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்தது. மேலும், இலங்கையில் பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வலியுறுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கனடா தொடர்ந்து முன்னணி பங்கை வகித்து வருகிறது.
கருப்பு ஜூலை ஒருபோதும் மறக்கப்படக் கூடாது. அது மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது. எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





