கனேடிய ஒலிம்பிக் வீரர் விக்டர் டேவிஸைக் கொன்ற வழக்கின் மூலம் அறியப்பட்ட கிளின் கிராஸ்லி (Glen Crossley), தற்போது 28 மில்லியன் டொலர் மதிப்பிலான சர்வதேச மோசடி வழக்கில் சிக்கி மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் மொன்றியல் நகரைச் சேர்ந்த 56 வயதான கிளின் கிராஸ்லி, அமெரிக்காவால் தேடப்படும் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதியவர்களைக் குறிவைத்து சுமார் 28 மில்லியன் டொலர் மோசடி செய்த கும்பலுக்குத் தலைமை தாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மொன்றியலில் இருந்து கொண்டு, அமெரிக்காவில் உள்ள முதியவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு, ஆசை வார்த்தைகளைச் சொல்லிப் பணத்தைப் பறிக்கும் ‘டெலிமார்க்கெட்டிங்’ குழுவில், கிளின் கிராஸ்லி (Glen Crossley) ஒரு மேற்பார்வையாளராக (Supervisor) செயல்பட்டுள்ளார்.
ஒரே முதியவரைத் மீண்டும் மீண்டும் குறிவைத்து பணத்தைப் பறிக்கும் கொடூரமான முறையை இக்குழுவினர் கையாண்டுள்ளனர்.
இக்குற்றச்செயலின் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் இந்த குழு, 28 மில்லியன் டொலர் ஈட்டியுள்ளதாகவும், அதில் 12 மில்லியன் டொலர் நிதியானது, ஊழியர்களுக்குச் சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்தக் கோரி அமெரிக்க அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, நேற்று மொன்றியல் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
எனினும், அவரை அமெரிக்காவிற்கு அனுப்ப அவரது வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
