கியூபெக் மாகாணத்தின் லவால் நகரில் அமைந்துள்ள ஆடம்பர முதியோர் இல்லத்திற்கு வெளியே மூதாட்டி ஒருவர் அதிகாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
லாவல் நகரின் அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வில்லாகியா டி எல்’இல் பாட்டன் (Villagia de l’Île Paton) என்ற பெயருடைய ஆடம்பர முதியோர் இல்லத்திற்கு வெளிப்புறத்திலேயே, குறித்த மூதாட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
88 வயதானவரும் ஜீனே கோஹியர் (Jeanne Gohier) என்ற பெயருடையவருமான மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
அவர் ஞாபக மறதி சார்ந்த ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனத் தெரியவருகின்றது.
இந்த ஆடம்பர முதியோர் இல்லத்தில் தனது பாட்டியின் பராமரிப்புக்காக மாதந்தோறும் பெருந்தொகை கட்டணம் செலுத்துவதாக அவரது பேரன் மார்க்-ஒலிவியர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு கட்டணம் செலுத்தியும், தனது பாட்டியின் பாதுகாப்பை, அந்த இல்லத்தின் நிர்வாகத்தினர் உறுதி செய்ய முடியாமல் போனது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின், மரணம் குறித்த காரணத்தை ஆராயும் நீதித்துறை அலுவலகம், இந்த விசாரணையைக் கையாளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


