கியூபெக் மாகாணத்தில் உள்ள நாடக மேடைகளில், கதையின் தேவைக்காக நடிகர்கள் புகைபிடிப்பது சட்டப்படி அனுமதிக்கப்படும் என்று கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இது கலை வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், மொன்றியல் மற்றும் கியூபெக் நகரங்களில் உள்ள சில நாடக மன்றங்கள் தங்களது நாடகங்களின் போது நடிகர்களைப் புகைபிடிக்க அனுமதித்தன.
இதற்காக அந்த நாடக மன்றங்களுக்கு கியூபெக் அரசாங்கம் அபராதம் விதித்தது.
இதனை எதிர்த்து ‘Trident’, ‘La Bordée’ மற்றும் ‘Premier Acte’ ஆகிய மூன்று முக்கிய நாடக மன்றங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், “ஒரு கதாபாத்திரத்தின் மன உளைச்சலையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலையோ யதார்த்தமாக வெளிப்படுத்த புகைபிடிப்பது அவசியமாக இருந்தால், அது கலைக்கான சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும்” என்று கூறியுள்ளது.
பொதுச் சுகாதாரம் முக்கியமானது என்றாலும், கலைத்துறையில் இத்தகைய யதார்த்தமான காட்சிகளுக்குத் தடை விதிப்பது கலைஞர்களின் அடிப்படை உரிமையைப் பாதிக்கும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
