மொன்றியல் – செயிண்ட் லியோனார்ட் (Saint-Léonard) பகுதியில் அமைந்துள்ள முக்கிய அங்காடியொன்றில் விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு குறைந்த மாட்டு இறைச்சியில் (Lean Ground Beef) ஆபத்தான ‘ஈ-கோலை’ (E. coli) பாக்டீரியா தொற்று இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், அந்த இறைச்சிப் பொதிகளைத் திரும்பப்பெறுமாறு கியூபெக் மாகாண விவசாய, மீன்பிடி மற்றும் உணவு அமைச்சு (MAPAQ) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
மொன்றியல் நகராட்சியின் உணவுப் பரிசோதனைப் பிரிவு ஆனது சம்பந்தப்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் திரும்பப்பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இந்த இறைச்சியை உட்கொண்டமையால் இதுவரை எவருக்கும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டதாகப் பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமைச்சின் அறிவிப்பின்படி, மொன்றியல் ஜான்-தலோன் வீதி கிழக்கில் அமைந்துள்ள ‘மார்ச்சே அட்லஸ்’ (Marché Atlas) அங்காடியில், கடந்த ஜூலை 8-ஆம் திகதி பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கொழுப்பு குறைந்த மாட்டு இறைச்சிகளுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் மென்சவ்வினால் மூடப்பட்ட பொலிஸ்டிரீன் (Polystyrene) தட்டுகளில் வைக்கப்பட்டுக் குளிரூட்டப்பட்ட நிலையில் இந்த இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
குறித்த திகதியில் இந்த அங்காடியில் இறைச்சி வாங்கிய நுகர்வோர்கள் அதனைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், உடனடியாக அகற்றுமாறும் அல்லது விற்பனை நிலையத்திற்குத் திருப்பித் தருமாறும், இயூபெக்கின் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



