சிறைக்குச் சென்றவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, அவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் திட்டத்தைக் கியூபெக் மாகாண அரசு தொடங்கியுள்ளது.
இதன்படி, கியூபெக்கில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் இனி ‘செஜெப்’ (CEGEP) எனப்படும் கல்லூரிப் பட்டயப் படிப்புகளைப் படிக்க முடியும்.
கியூபெக் உயர்கல்வி அமைச்சகமும், கனேடிய சிறைச்சாலைகள் துறையும் (CSC) இணைந்து இன்று இந்தத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.
இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இந்தப் படிப்புகளில் சேரலாம்.
முதற்கட்டமாக சமூக அறிவியல் (Social Sciences) மற்றும் வணிக நிர்வாகம் (Business Administration) ஆகிய துறைகளில் பட்டயப் படிப்புகள் வழங்கப்படவுள்ளன.
கைதிகளுக்கு இணைய வசதி இல்லாத, ஆனால் பாடங்களை வாசிக்கக்கூடிய சிறப்பு மடிக்கணினிகள் (Laptops) வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் சிறை அறைக்குள்ளேயே அமர்ந்து படிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காகக் கியூபெக் அரசு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியை ஒதுக்கியுள்ளது.
