பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சி தனது தனிநாடு கோரும் வாக்கெடுப்பு (Referendum) கொள்கையைக் கைவிட்டால், கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளதாகப் புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், பி.கியூ கட்சிக்கும் சார்லஸ் மிலியார்ட் (Charles Milliard) தலைமையிலான லிபரல் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரண்டு கட்சிகளும் சுமார் 31 முதல் 33 சதவீத மக்கள் ஆதரவுடன் சமநிலையில் உள்ளன.
ஆனால், கியூபெக் தனிநாடாகப் பிரிந்து செல்வதை வெறும் 29 சதவீத மக்கள் மட்டுமே ஆதரிக்கின்றனர். இது கடந்த 30 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த ஆதரவு அளவாகும். பி.கியூ கட்சியின் கொள்கைகளை விரும்பும் பல வாக்காளர்கள், தனிநாடு வாக்கெடுப்பு என்ற அச்சம் காரணமாகவே அக்கட்சிக்கு வாக்களிக்கத் தயங்குவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சர்வதேச அளவில் நிலவும் அரசியல் உறுதியற்ற தன்மையே மக்கள் தனிநாடு குறித்து யோசிக்கத் தயங்குவதற்குக் காரணமாகும். அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகள் மற்றும் சர்வதேச மோதல்கள் காரணமாக, மக்கள் தற்போது புதிய மாற்றங்களை விடப் பாதுகாப்பான சூழலையே விரும்புகின்றனர்.
மத்திய அரசில் பிரதமர் மார்க் கார்னியின் செல்வாக்கு அதிகரித்துள்ளமை, மாகாண அளவில் லிபரல் கட்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
பி.கியூ கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் (Paul St- Pierre Plamondon), தனது கட்சியின் அடிப்படைத் தொண்டர்களைத் திருப்திப்படுத்த வேண்டுமா அல்லது புதிய வாக்காளர்களைக் கவர வேண்டுமா என்ற நெருக்கடி நிலையில் உள்ளதாகத் தெரியவருகின்றது.
