பல ஆண்டுகளாகப் போதிய பராமரிப்பின்றிச் சிதிலமடைந்து காணப்பட்ட மொன்றியலின் மேய்சனேவ் – ரோஸ்மாண்ட் (Maisonneuve-Rosemont) மருத்துவமனையை நவீனமயமாக்குவதற்காக, 700 மில்லியன் டாலர் நிதியுதவியை கியூபெக் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கியூபெக்கின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் இந்த பாரிய நிதியொதுக்கீட்டை உறுதி செய்தார். இந்த நிதியில் 400 மில்லியன் டொலர் கட்டுமானத்திற்கு முந்தைய ஆயத்தப் பணிகளுக்காகவும் எஞ்சிய 300 மில்லியன் டொலர் விரிவான கட்டிட வரைபடத் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.
நீண்டகாலமாக எலிகள் மற்றும் வௌவால்களின் நடமாட்டம், அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடை மற்றும் நீர் கசிவு போன்ற பிரச்சினைகளால், இந்த மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் பெரும் அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன.
குறிப்பாக, கடந்த காலங்களில் அறுவை சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் அளவிற்கு இதன் உட்கட்டமைப்பு மோசமடைந்திருந்தது. இந்த நிலை மாற்றப்பட்டு, கியூபெக் மக்கள் தகுதியான நவீன மருத்துவ வசதிகளைப் பெறுவதை இந்த அரசு உறுதி செய்யும் என்று, கியூபெக்கின் புதிய முதலமைச்சர் தெரிவித்தார்.
மொத்தம் 5 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த மாபெரும் திட்டத்தின் கீழ், இந்த மருத்துவமனை 720 தனிநபர் அறைகளைக் கொண்ட ஒரு அதிநவீன சிகிச்சை மையமாக மாற்றப்படவுள்ளது. இதற்கான முதல் ஒப்பந்தப் புள்ளிகள் (Tenders) வரும் வாரங்களில் கோரப்படவுள்ளன.
எனினும் இந்த முழுமையான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, புதிய கட்டிடத்தில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதற்கு 2036-ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
