முன்னணி கட்டுமான நிறுவனமான ‘SNC-Lavalin’-இன் முன்னாள் கட்டுமானப் பிரிவுத் தலைவர் ரியாத் பென் ஐசா (Riadh Ben Aïssa), நீதிமன்றம் விதித்த 24 மில்லியன் டொலர் அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், அவருக்குக் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பை வழங்கியது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மொன்றியல் மெக்கில் (McGill) பல்கலைக்கழக மருத்துவமனை ஊழல் வழக்கில், ரியாத் பென் ஐசா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இந்த ஊழலின் மூலம் அவர் ஈட்டிய சுமார் 24 மில்லியன் டொலர்களை அரசாங்கத்திற்கு அபராதமாகத் திரும்பச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த அபராதத்தைச் செலுத்த ரியாத் பென் ஐசாவுக்கு நீண்டகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், அந்தப் பணத்தைச் செலுத்த அவர் தவறியதோடு, தனது வெளிநாட்டுச் சொத்துக்கள் குறித்த முறையான விபரங்களையும் சமர்ப்பிக்கவில்லை.
இதனால், சட்டவிதிகளின்படி, மொன்றியல் நீதிமன்றத்தினால் அவருக்கு இந்த மேலதிக சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் குடும்பத்தினருக்கு லஞ்சம் கொடுத்த குற்றத்திற்காக சுவிட்சர்லாந்து சிறையிலும் இவர் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
