கியூபெக்கின் பாரம்பரிய அடையாளமான மேப்பிள் சிரப் (Maple Syrup) தயாரிப்பில் பாரிய கலப்பட மோசடி நடைபெற்றுள்ளதை என்குவெட் (Enquête) புலனாய்வு குழு அம்பலப்படுத்தியுள்ளது.
100% சுத்தமான மேப்பிள் சிரப் என்று முத்திரையிடப்பட்ட கொள்கலன்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் கரும்புச் சர்க்கரை கலக்கப்பட்டிருப்பது ஆய்வகச் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாதாரண நுகர்வோர் ஒருவருக்கு மேப்பிள் சிரப்பின் சுவையில் ஏற்பட்ட மாற்றமே இந்த மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. மொன்றியலுக்கு அருகிலுள்ள செயின்ட்-கிரிசோஸ்டோம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீவ் போர்டியூ (Steve Bourdeau) என்பவரது தயாரிப்புகளை ACER எனும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் சோதனை செய்தது.
பரிசோதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளிலும் பாதிக்கும் மேல் கரும்புச் சர்க்கரை கலக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கியூபெக் வரலாற்றில் விற்பனைக்கு வந்த ஒரு மேப்பிள் சிரப் தயாரிப்பில் இவ்வளவு பெரிய அளவில் கலப்படம் கண்டறியப்படுவது இதுவே முதல்முறை என நுண்யுயிரியலாளர் லூக் லாகேஸ் தெரிவித்துள்ளார்.
புலனாய்வு ஊடகவியலாளர்கள் போலி வாடிக்கையாளர்களாகச் சென்று, இந்த மேப்பிள் சிரப் விற்பனையாளரான ஸ்டீவ் போர்டியூவிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது, சந்தை விலையை விட மிகக் குறைவாக, ஒரு கொள்கலனை 5 டொலருக்கும் குறைவான விலைக்கு இவர் விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணையின் போது, ஒண்டாரியோவிலிருந்து வாங்கிய மேப்பிள் சிரப்பை கியூபெக் தயாரிப்பு எனத் தவறாக முத்திரையிட்டு விற்றதையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் வெளியானதைத் தொடர்ந்து, IGA மற்றும் Metro போன்ற கியூபெக் மாகாணத்தின் முன்னணி வர்த்தக நிலையங்கள் ஸ்டீவ் போர்டியூவின் தயாரிப்புகளைத் தங்களது விற்பனைப் பிரிவுகளிலிருந்து அவசரமாக அகற்றியுள்ளன.
கியூபெக்கில் மொத்த விற்பனையிலொ, விற்கப்படும் மேப்பிள் சிரப் தீவிரமாகச் சோதனை செய்யப்படுகின்றது. ஆனால், தயாரிப்பாளர்களே நேரடியாக டப்பாக்களில் அடைத்து விற்கும் போது, அவை முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை என்ற நிலையே, இந்த கலப்பட மோசடிக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
