நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் ஷாம்பெய்ன் தனது 5 நாள் சீனப் பயணத்தை நேற்று வெற்றிகரமாக நிறைவு செய்தார். அமெரிக்காவை மட்டும் சார்ந்திராமல், தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நிதியமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய கனடா-சீனா நிதிச் செயல்பாட்டுக் குழு (Financial Working Group) உருவாக்கப்பட்டுள்ளது.
கனேடிய மத்திய வங்கி ஆளுநர் டிப் மேக்லம் மற்றும் முன்னணி வங்கித் தலைவர்கள் இந்தப் பயணத்தில் இணைந்தது, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் இனி பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் நிதி நிலைத்தன்மை குறித்து நேரடியாக ஆலோசனைகளை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனச் சந்தையில் கனேடிய வங்கிகள் அதிக அளவில் கிளைகளைத் திறக்கவும், காப்பீட்டுத் துறையில் முதலீடு செய்யவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் கனடாவிற்கு வருகை தருமாறு சீனாவின் நிதியமைச்சருக்கு ஷாம்பெய்ன் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
