கியூபெக் சிட்டி மற்றும் ரொறன்ரோவை இணைக்கும் அதிவேக ரயில் (High-Speed Rail) திட்டத்தைக் கனேடிய அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் பிஎர் பொய்லியேவ் (Pierre Poilievre) கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால், இந்த “பயனற்ற” திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப் போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
நேற்று பீட்டர்பரோ நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொய்லியேவ், இந்தத் திட்டத்திற்கு சுமார் 60 முதல் 90 பில்லியன் டொலர்கள் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்றும், இந்தப் பணத்தைக் கொண்டு நாட்டின் கடனையும் பணவீக்கத்தையும் குறைக்கலாம் என்றும் தெரிவித்தார்.
ரயில் பாதைக்காக விவசாயிகளின் நிலங்களையும் பொதுமக்களின் காணிகளையும் மத்திய அரசாங்கம் வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயல்வதாக (Expropriation) அவர் சாடினார்.
இதற்குப் பதிலளித்த போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன், கன்சர்வேடிவ் கட்சியினர் குறுகிய மனப்பான்மையுடன் சிந்திப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
