நியூயோர்க் விமான நிலைய விபத்தில் உயிரிழந்த இரண்டு கனேடிய விமானிகளின் உடல்கள் நேற்று கௌரவ மரியாதையுடன் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.
கப்டன் அன்டோயின் ஃபாரஸ்ட் (Antoine Forest) மற்றும் துணை விமானி மெக்கென்சி குந்தர் (Mackenzie Gunther) ஆகியோரின் உடல்களுக்கு விமானத்துறை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கப்டன் அன்டோயின் ஃபாரஸ்டின் உடல் மாலை வேளையில் மொன்றியல் ட்ரூடோ விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
மொன்றியலில் உள்ள எயார் கனடா தலைமையகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கான விமானிகள் மற்றும் ஊழியர்கள் மழையிலும் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.
கியூபெக்கின் கொட்டோ-டு-லக் (Coteau-du-Lac) பகுதியைச் சேர்ந்த அன்டோயின் ஃபாரஸ்டின் மறைவு அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இரண்டு விமானிகளும் ”பணியின் ஆரம்பக் கட்டத்தில் இருந்த மிகச் சிறந்த திறமையாளர்கள்” என அவர்களது சக விமானிகள் நினைவு கூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
