கனடா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 2 சதவீதத்தைப் பாதுகாப்புத் துறைக்காகச் செலவிட வேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் நீண்டகால இலக்கை, மத்திய அரசு முதன்முறையாக எட்டியுள்ளது.
ஜேர்மனியில் இடம்பெற்ற பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகு, மத்திய அரசு இவ்வளவு பெரிய நிதியை இராணுவத்திற்காகச் செலவிடுவது இதுவே முதல் முறையாகும்.
ஹாலிஃபாக்ஸ் கடற்படைத் தளத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் மார்க் கார்னி, “உலகம் மாறிவிட்டது, அதற்கேற்ப கனடாவும் மாற வேண்டும்” எனக் குறிப்பிட்டு இந்த மைல்கல்லை அறிவித்தார்.
2025–26 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புச் செலவீனம் 63 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
இந்த இலக்கை அடைய கடந்த சில மாதங்களில் மத்திய அரசு அதிவேகமாகச் செயல்பட்டது.
ஆட்சேர்ப்பு நெருக்கடியைச் சமாளிக்க இராணுவ வீரர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரகத் துப்பாக்கிகள், போர் விமானங்கள் மற்றும் வெடிமருந்து உற்பத்தி நிலையங்களுக்காகப் பெருந்தொகை நிதி, மத்திய அரசினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
