மொன்றியலில் அமைந்துள்ள மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி வழங்கி வந்த முக்கிய நன்கொடையாளர் ஒருவர் தனது ஆதரவை மீளப் பெற்றுள்ளார். மெக்கில் பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவர்கள் இஸ்ரேலிய கல்வி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்தே, அந்த நன்கொடையாளர் தனது ஆதரவை மீளப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்கில் பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் சங்கம் (LSA) நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 57 சதவீத மாணவர்கள் இஸ்ரேலுக்கு எதிரான முழுமையான புறக்கணிப்பு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த முடிவின்படி, இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களுடனான கல்விப் பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் நிறுவன ரீதியான அனைத்துத் தொடர்புகளையும், மாணவர் சங்கம் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கை தனிப்பட்ட இஸ்ரேலிய பேராசிரியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், அந்நாட்டு கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு எதிரானது மட்டுமே என்றும் மாணவர் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தத் தீர்மானம் வெளியான சில தினங்களிலேயே, மெக்கில் பல்கலைக்கழகத்திற்கு நீண்டகாலமாக நிதியுதவி வழங்கி வந்த ஒருவர் தனது பங்களிப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இத்தகைய புறக்கணிப்பு நடவடிக்கைகள் யூத மாணவர்களைப் பாதிக்கும் என்றும், பல்கலைக்கழக நிர்வாகம் இதில் தலையிடத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை, மெக்கில் பல்கலைக்கழகத்தின் சட்ட மாணவர் சங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து, ஒரு தரப்பு மாணவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்தப் புறக்கணிப்புத் தீர்மானம் மாணவர் சங்கத்தின் யாப்பிற்கு எதிரானது என்றும், இது குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதாகவும் அவர்கள் வாதிடுகின்றனர்.
இத்தகைய முடிவுகள் இஸ்ரேலிய நிறுவனங்களுடன் கல்வி ரீதியாகத் தொடர்பு கொள்ள விரும்பும் மாணவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் தரப்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
