கியூபெக் பேராயர் கார்டினல் ஜெரால்ட் சிப்ரியன் லாக்ரோவா (Cardinal Gérald Cyprien Lacroix) 6 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனக் கூறியே, அவர் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த விவகாரம் கனடிய கத்தோலிக்கத் திருச்சபை வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கியூபெக் பேராயர் நிர்வாகத்திற்கு எதிராக சுமார் 150 பேர் இணைந்து தொடர்ந்துள்ள ஒரு கூட்டுப் பொதுநல வழக்கில் (Class-action lawsuit), பெண் ஒருவர் கார்டினல் லாக்ரோவா மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.
1980-களின் இறுதியில், தான் 17 வயது சிறுமியாக இருந்தபோது கார்டினல் லாக்ரோவா தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடக்கம் முதலே மறுத்து வரும் கார்டினல், இவை உள்நோக்கம் கொண்டவை என்றும், தனது நற்பெயருக்குப் பயங்கரமான களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து வத்திக்கான் (Vatican) ஏற்கனவே ஒரு உயர்மட்ட விசாரணையை நடத்தியது.
2024-ம் ஆண்டு அந்த விசாரணையின் முடிவில், கார்டினல் லாக்ரோவாவுக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும், அவர் மீதான விசாரணையைத் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் போப்பாண்டவர் நிர்வாகம் அறிவித்திருந்தது.
தற்போது கார்டினல் லாக்ரோவா எடுத்துள்ள இந்தத் தற்காப்பு நடவடிக்கையானது, முறைப்பாட்டினை முன்வைத்த தரப்பினருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.
