கியூபெக் மாகாணத்தின் போயண்ட் கிளேர் (Pointe-Claire) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் பொலிஸார் நடத்திய பாரிய சோதனையில், சுமார் 18 கிலோ கிராம் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த போதைப்பொருளுடன் பெரும் தொகை பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. திட்டமிடப்பட்ட குற்றச்செயல் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
கியூபெக் மாகாண பொலிஸார் (SQ) மற்றும் ஒன்ராறியோவின் விசேட அதிரடிப்படையினர் இணைந்த இந்த நடவடிக்கையில் 25 அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போயண்ட் கிளேர் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் ஒன்ராறியோ எல்லைக்கு அருகிலுள்ள ரிவியர்- போடெட் (Rivière-Beaudette) பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட போதிலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. குறித்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பானது ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ் (Hells Angels) எனும் பாதாள உலகக் கும்பலுடன் தொடர்புடையது எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடந்த மார்ச் 17-ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
