RCMP எனப்படுவதும் மத்திய அரசின் கீழ் இயங்குவதுமான காவல்துறையில் நிலவும் கடும் ஆள் பற்றாக்குறை காரணமாக, நாட்டின் பொதுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கணக்காய்வாளர் நாயகம் (Auditor General) கரேன் ஹோகன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக RCMP காவல்துறை கூறிவந்தாலும், கள யதார்த்தம் அதற்குப் புறம்பாக இருந்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, சுமார் 3,400 முன்னணி காவல்துறை அதிகாரிகளுக்கு அந்த காவல்துறையில் பற்றாக்குறை நிலவுகிறது.
மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் நேரடியாகப் பணியாற்றும் பொலிஸ் பிரிவுகளே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பதவித்தர நிலைகளுக்கு உரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படாமை காரணமாக, போதிய வீரர்கள் இல்லாமையால், தற்போதுள்ள அதிகாரிகள் கடும் பணிச்சுமைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளனர். இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்ய முக்கியமான ஆறு பரிந்துரைகளை கணக்காய்வாளர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
