கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தின் வடக்குப் பகுதிகளில் பரவி வரும் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் வராமல், தொடர்ந்தும் எரிந்து வருகிறது.
இந்த ஆண்டு இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இது பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தின் மொத்த பரப்பளவை விட அதிகம் என, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் தீவிபத்து காரணமாக 30-க்கும் மேற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சஸ்காட்செவன் பொதுப் பாதுகாப்பு நிறுவனம் (SPSA) வியாழக்கிழமை வெளியிட்ட தகவல்படி, இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான ஹெக்டேர் காடுகள் எரிந்துள்ளன.
தினமும் புதிய தீ விபத்துகள் பதிவாகி வருகின்றன.
வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, சஸ்காட்செவனில் 27 தீ விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில் அவற்றில் ஆறு விபத்துகளில், தீ இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
வியாழக்கிழமை பிற்பகல், லாக் லா ரோஞ்ச் இந்தியன் பேண்ட் (LLRIB), சிகாச்சு ஏரி (Sikachu Lake) மற்றும் கிளாம் பிரிட்ஜ் (Clam Bridge) பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயமாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
வெளியேற்றப்பட்ட மக்கள் குறிப்பிடத்தக்க சவால்களையும் மன அழுத்தத்தையும் எதிர்கொள்வதாக தெரியவருகின்றது.
செஞ்சிலுவைச் சங்கம் கிட்டத்தட்ட 1,000 ஹோட்டல் அறைகளை வெளியேற்றப்பட்டவர்களுக்காக ஒதுக்கியுள்ளதாகவும், தேவைப்படுபவர்களுக்கு உணவு மற்றும் தனிப்பட்ட சேவைகளை வழங்குவதாக, செஞ்சிலுவைச் சங்கத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கான மூத்த இயக்குனர் கிம் மேக்லீன் தெரிவித்துள்ளார்.
