நாட்டில், சில சின்னங்களை பயன்படுத்தி திட்டமிட்டு வெறுப்பைத் தூண்டுவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது.
ஸ்வஸ்திகா போன்ற சின்னங்களை பயன்படுத்தி சமூகங்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டினால், அது குற்றமாகக் கருதப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா, கனடாவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ள ‘Proud Boys’, ஹமாஸ் மற்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (Islamic Revolutionary Guard Corps) போன்ற குழுக்களுடன் தொடர்புடைய சின்னங்களையும் உள்ளடக்க வைக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒரு வழிபாட்டுத் தலத்திற்கு வெளியே ஹமாஸ் கொடிகள் அல்லது ஸ்வஸ்திகா சின்னங்களைப் பயன்படுத்தி யூதர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவது குற்றமாகக் கருதப்படும்.
கனடாவில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ள யூத எதிர்ப்பு (Antisemitism) மற்றும் இஸ்லாமிய வெறுப்பு (Islamophobia) போன்ற வெறுப்பு சம்பவங்களை எதிர்கொள்ளும் அரசின் முக்கிய நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட சமூகங்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த பிறகும் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக கன்சர்வேட்டிவ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையிலேயே, இந்த சின்னங்கள் குறித்த சட்டம் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
