சர்ச்சைக்குரிய சட்டங்களில் ஒன்றான கியூபெக் மாகாணத்தின் ‘Bill 21’ சட்டம் தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை இன்று ஒட்டாவாவில் உள்ள உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.
அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த விசாரணை, நாட்டின் அரசியல் மற்றும் மனித உரிமை வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு கியூபெக் மாகாண அரசால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம், அரசுப் பணியில் இருப்பவர்கள் பணியின்போது மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்கிறது.
ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் முதலானோர், ஹிஜாப், சீக்கிய தலைப்பாகை (Turban), யூதர்களின் கிப்பா (Kippah) அல்லது கிறித்தவ சிலுவை போன்ற மத அடையாளங்களை அணிந்து பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தை அமுற்படுத்துவதற்காக கியூபெக் மாகாண அரசானது ‘நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ்’ (Notwithstanding Clause) எனப்படும் சிறப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமை, இந்த வழக்கில் மிக முக்கியமான அம்சம் ஆகும்.
மொன்றியல் ஆங்கில பாடசாலைச் சபை (EMSB) மற்றும் முஸ்லிம் அமைப்புகள் இந்த ‘Bill 21’ சட்டத்திற்கு எதிராகப் போராடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
