கனடாவின் பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள சிங்குவாகூசி பூங்காவில் உள்ள தமிழ் இனக்கொலை நினைவுச் சின்னம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டிற்குள் இது மூன்றாவது முறையாக இடம்பெற்றுள்ளது.
மார்ச் 20, 2026 ஆம் ஆண்டு அதிகாலை நேரத்தில், நினைவுச் சின்னம் சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது.
முதன்மை மேடை மற்றும் மூன்று பேனல்களில் கிராஃபிட்டி சுவரெழுத்துகள் மூலம் அவமதிப்பு செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இரண்டு பேனல்களுக்கு சிறிய சேதமும் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை பிராம்ப்டன் நகர பாதுகாப்பு பணியாளர்கள் முதலில் கண்டறிந்தனர். பின்னர் பீல் பிராந்திய காவல்துறையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 2025 மே 27 மற்றும் ஜூன் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சேதப்படிப்புகளில் நினைவுச் சின்னத்தின் விளக்குகள் பெரும்பாலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து கனடியத் தமிழர் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
“இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. தமிழ் இனக்கொலை மறுப்பு மற்றும் திரித்தலின் ஒரு பகுதியாகும்,” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு, பீல் பிராந்திய காவல்துறையினரையும் பிராம்ப்டன் நகராட்சியையும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வெளிநாட்டு தலையீடு தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ள இந்த அமைப்பு, சந்தேகமான நடவடிக்கைகள் இருந்தால் அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு தமிழ் கனடியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இத்தகைய தாக்குதல்களுக்கிடையிலும், இந்த நினைவுச் சின்னம் உண்மை, நினைவு மற்றும் உறுதிப்பாட்டின் அடையாளமாக தொடர்ந்து நிலைத்து நிற்கும் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இதுவரை, இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் குறித்து காவல்துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை.”
