ஹொக்கி விளையாட்டின் பிரபல வர்ணனையாளர் டான் செர்ரிக்கு (Don Cherry) ஒர்டர் ஆஃப் கனடா (Order of Canada) விருது வழங்க வேண்டும் என்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் முயற்சிக்கு, அந்தக் கட்சியின் கியூபெக் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் இம்முடிவு ஒரு தவறான யோசனை என, அக்கட்சியின் கியூபெக் மாகாணப் பொறுப்பாளர் பியர் பால்-ஹஸ் (Pierre Paul-Hus) பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். சுமார் 40 ஆண்டுகளாக ஹொக்கி வர்ணனையாளராக இருந்த 92 வயது டான் செர்ரி, தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அறியப்படுபவர் ஆவார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோரை You people” என்ற வார்த்தையூடாகக் குறிப்பிட்டு, அவர்கள் Poppy பூக்களை அணிவதன் மூலம் போர் வீரர்களை மதிப்பதில்லை என்று கூறியதற்காக அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதற்கு முன்பும், பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் குறித்தும் அவர் பலமுறை இழிவான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), டான் செர்ரி ஒரு உண்மையான கனேடியர் எனக் கூறி இந்த விருதுக்கான மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.
ஆனால், கியூபெக்கைச் சேர்ந்த அதே கட்சியின் உறுப்பினர்களான பியர் பால்-ஹஸ், ஜெரார்ட் டெல்டெல் உள்ளிட்டோர் இதனை எதிர்க்கின்றனர். பிரெஞ்சு மொழி பேசுபவர்களையும், கியூபெக் தேசத்தையும் அவமதித்த ஒருவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்குவது முறையல்ல என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, பிரதமர் அலுவலகம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
