மொன்றியலின் லசால் (LaSalle) பகுதியில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்திலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை, அவ்வழியாகச் சென்ற நபர் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு காப்பாற்றியுள்ளார்.
டேவிட் மில்லர் என்ற நபரே காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் மேல் தளத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் தீயினால் சூழப்பட்டு வெளியேற முடியாமல் சிக்கியிருந்தனர். அந்த வீட்டில் அருகில் பயணித்த டேவிட் மில்லர் தனது வாகனத்தில் இருந்த ஏணியை உடனடியாக எடுத்துச் சென்று, அதனை வீட்டின் மேல் மாடியில்
பொருத்தி, ஐந்து பேரையும் பத்திரமாக கீழே இறக்கியுள்ளார்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே மில்லர் அனைவரையும் மீட்டுவிட்டார். மீட்கப்பட்ட ஐந்து பேருக்கும் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்ட போதிலும்,
அவர்கள் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர். மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
