கியூபெக் மாகாண அரசுக்கு எதிராக 7,000 க்கும் மேற்பட்ட டாக்சி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்துள்ள கூட்டுப் போராட்டம் தற்போது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை (Supreme Court of Canada) எட்டியுள்ளது.
உபர் (Uber) போன்ற செயலி வழி போக்குவரத்துச் சேவைகளின் வருகையினாலும், மாகாண அரசின் புதிய சட்டங்களினாலும் தங்களின் டாக்சி உரிமப் பத்திரங்கள் (Taxi Permits) சந்தை மதிப்பை இழந்துவிட்டதாகக் கூறியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அண்மையில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, டாக்சி உரிமையாளர்கள் இந்த சட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கியூபெக் மாகாண அரசு கடந்த 2019 ஆம் ஆண்டில் கொண்டு வந்த புதிய போக்குவரத்துச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலம், பாரம்பரிய டாக்சி உரிமப் பத்திர முறை (Permit system) முற்றாக ஒழிக்கப்பட்டது.
இதனால், பல தசாப்தங்களாகத் தங்களின் வாழ்நாள் முதலீடாகக் கருதி, லட்சக்கணக்கான டொலர்கள் கொடுத்து வாங்கிய உரிமப் பத்திரங்களின் மதிப்பு, ஒரே இரவில் பூஜ்ஜியமாக மாறியதாக டாக்சி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
முன்பு கியூபெக் அரசாங்கம் டாக்சி உரிமங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததால், மொன்றியல் மாநகரில் ஒரு டாக்சி உரிமப் பத்திரத்தின் சந்தை மதிப்பு 2014 ஆம் ஆண்டில் 180,000 டொலருக்கும் அதிகமாகக் காணப்பட்டது.
இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் உபர் நிறுவனம் எவ்வித உரிமக் கட்டுப்பாடுகளுமின்றி சந்தைக்குள் நுழைந்ததால், பாரம்பரிய டாக்சித் தொழில் கடுமையாக முடங்கியது.
இது அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு மறைமுக சொத்து அபகரிப்பு (Disguised expropriation) என்று விமர்சித்துள்ள டாக்சி உரிமையாளர்கள், தாமா மெடலஸ் (Dama Metellus) என்பவரை முதன்மை மனுதாரராகக் கொண்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
