பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உலகளாவிய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ள, பல்கலைக்கழகங்களும் வணிக நிறுவனங்களும் கைகோர்க்க வேண்டியது அவசியம் என மெக்கில் பல்கலைக்கழகத்தின் தலைவர் தீப் சைனி (Deep Saini) தெரிவித்துள்ளார்.
நேற்று மொன்றியால் வர்த்தக சபையில் உரையாற்றிய அவர், கியூபெக் தொழில்துறையினரைத் தங்களின் உத்திசார் பங்காளிகளாக மாறும்படி கேட்டுக்கொண்டார்.
தற்போதைய நிலையற்ற பொருளாதாரச் சூழலில், அரசும் தனியார் நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை சைனி வலியுறுத்தினார்.
மெக்கில் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த மாணவர்களை உருவாக்கி வருவதாகவும், கியூபெக் நிறுவனங்கள் இந்தத் திறமையாளர்களைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் உலக சந்தையில் பிரகாசிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள மெக்கில் பல்கலைக்கழகம் தற்போது 45 மில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.
