லோங்குவேல் (Longueuil) காவல்துறையினரால் 15 வயது சிறுவன் நூரன் ரெசாயி (Nooran Rezayi) சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மொன்றியால் காவல்துறை (SPVM) இன்று அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.
இந்தக் கொலைச்சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றது.
தென் கரைப் பகுதிகளில் உள்ள ஐந்து நகரங்களில் மொத்தம் 9 இடங்களில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பிராஸார்ட் (Brossard), லோங்குவேல், செயின்ட்-பிலிப் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை ஒரே நேரத்தில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள் குறித்து குற்றவியல் ரீதியாக விசாரிப்பதே மொன்றியால் காவல்துறையின் நோக்கமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் கொல்லப்பட்டது குறித்து கியூபெக்கின் சுயாதீன புலனாய்வுப் பிரிவு (BEI) ஒருபுறம் விசாரித்து வரும் நிலையில், மொன்றியால் காவல்துறை இந்தத் தனியான குற்றவியல் விசாரணையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
