இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றுப் பரவல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆசிய பிராந்தியத்திலுள்ள முக்கிய வானூர்தி நிலையங்களில் பயணிகளுக்கான சுகாதாரப் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
மேற்கு வங்கத்தில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட ஐவர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்புடைய சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தாய்லாந்து, நேபாளம் மற்றும் தாய்வான் உள்ளிட்ட நாடுகள் எல்லைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து வருகை தரும் பயணிகளைத் தாய்லாந்து அதிகாரிகள் வானூர்தி நிலையங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தி வருவதுடன், நிபா வைரஸை ஒரு ‘அதி-ஆபத்தான நோய்’ என வகைப்படுத்த தாய்வான் திட்டமிட்டுள்ளது.
வௌவால்கள் மற்றும் பன்றிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய இந்த உயிர்கொல்லி வைரஸ், 40 முதல் 75 சதவீத உயிரிழப்பு விகிதத்தைக் கொண்டது.
இதற்கு முறையான தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இதுவரை கண்டறியப்படாத நிலையில், எல்லை தாண்டிய பரவலைத் தடுக்கவே இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பிராந்திய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
