கியூபெக்கின் வடக்கு பகுதியான இனுஜுவாக் கிராமத்தில், போலீஸ் பிடியிலிருந்த 23 வயது இளைஞர் ஒருவர் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கியூபெக் மாகாணத்தின் தன்னாட்சி பெற்ற புலனாய்வு அமைப்பான BEI (Bureau des enquêtes indépendantes) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. போலீஸ் நடவடிக்கையின் போது ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்பு நேரிட்டாலோ, கியூபெக் சட்டப்படி BEI அமைப்பு விசாரணை நடத்துவது கட்டாயமாகும்.
அந்த இளைஞரைக் கட்டுப்படுத்த போலீசார் டேசர் (Taser) எனப்படும் மின்சார அதிர்வு கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த இளைஞரின் நிலை மோசமானதை அடுத்து, அவர் உடனடியாக விமானம் மூலம் மொண்ட்ரியலில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் போலீசார் தரப்பில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்ததா என்பதைக் கண்டறிய ஐந்து சிறப்புப் புலனாய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவியாகக் கியூபெக் மாகாண போலீசாரின் (SQ) தடயவியல் நிபுணர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தக் கைது நடவடிக்கையை நேரில் பார்த்தவர்கள் அல்லது இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைத்திருப்பவர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு புலனாய்வு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


