கியூபெக் மாகாண அரசு ‘PEQ’ எனப்படும் பிரபலமான குடிவரவுத் திட்டத்தை திடீரென ரத்து செய்ததற்கு எதிராக, மொண்ட்ரியல் மற்றும் கியூபெக் சிட்டி ஆகிய இரண்டு முக்கிய நகரங்களின் மேயர்கள் ஒன்றிணைந்து ‘கூட்டுப் பிரகடனம்’ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
மொண்ட்ரியல் மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெர்ராடா மற்றும் கியூபெக் சிட்டி மேயர் புருனோ மார்ச்சண்ட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், ஏற்கனவே மாகாணத்தில் தங்கியுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பழைய சட்டத்தின் கீழ் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
பொதுவாக பல்வேறு விவகாரங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட இந்த இரண்டு பெரிய நகரங்களும், குடிவரவு விவகாரத்தில் கைகோர்த்திருப்பது இதுவே முதல்முறை என்று கருதப்படுகின்றது.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் PEQ திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக அதிகக் கட்டுப்பாடுகள் கொண்ட ‘PSTQ’ எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய சட்டம் மாண்ட்ரியல் மற்றும் லாவல் (Laval) பகுதிகளில் இருப்பவர்களை விட, மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
