கனடா கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப் நிலத்தில் திட்டமிடப்பட்டுள்ள வீட்டுவசதித் திட்டத்திற்கு எதிராக, ஒட்டாவா மேயர் மார்க் சட்க்ளிஃப் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு, ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
கனடா கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப் நிலத்தில் 1,480 வீடுகள் கட்டப்பட உள்ளதை எதிர்த்து ஒட்டாவா மாநகராட்சியானது வழக்கு தொடுத்தது.
கனடா கோல்ஃப் மற்றும் கன்ட்ரி கிளப் நிலத்தின் உரிமையாளரான கிளப்லிங்க் நிறுவனத்திற்கு எதிராகவே இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
44 வருட பழமையான ஒப்பந்தத்தின்படி இந்த நிலம் திறந்தவெளியாகவே இருக்க வேண்டும் என ஒட்டாவா மாநகராட்சி இவ்வழக்கில் வாதிட்டது.
இருப்பினும், நீதிமன்றங்கள் கிளப்லிங்க் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தன.
கடந்த வாரம், உச்ச நீதிமன்றமும் இறுதி மேல்முறையீட்டை விசாரிக்க மறுத்ததால், இவ்விடயம் தொடர்பான சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சட்டப் போராட்டம் முடிவடைந்த போதிலும், மேயர் மார்க் சட்க்ளிஃப் இந்த திட்டத்தை தடுக்க தனது அதிகாரத்தில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாக, தற்போது அறிவித்துள்ளார்.




