ஒன்டாரியோ அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலமானது, பாடசாலைகளுக்குள் காவல்துறை அதிகாரிகளை நியமித்தல் தொடர்பில், பாடசாலைச்சபைகளைக் கட்டாயப்படுத்துவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையானது, கல்வி அமைப்பில் காவல்துறையின் பங்கு குறித்த விவாதத்தை, ஒட்டாவாவில் மீண்டும் கிளப்பியுள்ளது.
ஒட்டாவா-கார்ல்டன் மாவட்ட பாடசாலைச்சபையானது பாடசாலைகளுக்குள் காவல்துறைக்கு அனுப்பப்படும் திட்டத்துக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது.
இதனையடுத்து, ஒட்டாவா காவல்துறை 2021 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்குள் தமது அதிகாரிகளை அனுப்புவதை நிறுத்தியது.
இந்த நிலையில், ஒன்டாரியோ கல்வி அமைச்சர் பால் கலண்டரா காவல்துறை அதிகாரிகளை பாடசாலையில் இருந்து அகற்றி வைத்த, முந்தைய முடிவுக்கு தனது கடுமையான கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தினார்.
இருப்பினும், ஒட்டாவாவில் உள்ள சில பாடசாலை அறங்காவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பாடசாலைகளில் காவல்துறை இருப்பது மாணவர்களுக்கு உதவுவதை விட தீங்கு விளைவிக்கும் என்றும் வாதிடுகின்றனர்
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒட்டாவா காவல்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, ஒட்டாவாவின் நான்கு பாடசாலை மாவட்டங்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டார்.
பாடசாலைகளில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஒரு பதிலளிப்பாக இதை உருவாக்கியதாகவும், பாடசாலை சபைகளுடன் கலந்தாலோசித்தே இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
