கனடாவில் அதிகரித்து வரும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வு, குறிப்பாக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் கடுமையான வார்த்தைகள், தன்னை விசனத்துக்கு உள்ளாக்குவதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா தெரிவித்துள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வர்த்தகக் கொள்கைகளால் உலக நாடுகள் பல பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கான அமெரிக்கத் தூதரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
ஹாலிஃபாக்ஸ் வர்த்தக சபையின் நிகழ்வொன்றில் பேசிய ஹோக்ஸ்ட்ரா, “அமெரிக்கா-கனடா உறவில் ஆர்வமுள்ள கனடியர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது” என்று கூறினார்.
கனடாவின் நிதி அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-ஃபிலிப் ஷாம்பெயின், இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகப் பிரச்சினையை “போர்” என்று பலமுறை குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய மொழிப்பிரயோகம் “ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும்” என்றார்.
“உண்மையாகவே கனடா அமெரிக்காவுடன் போரில் இருந்தால், அது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும்” என்றும் ஹோக்ஸ்ட்ரா கூறியுள்ளார்.
கனடா புள்ளிவிவரங்களின்படி, டிரம்ப்பின் வரி அறிவிப்புகளுக்குப் பிறகு, கனடாவின் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி கிட்டத்தட்ட 16% குறைந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு வரும் பொருட்களின் இறக்குமதியும் கிட்டத்தட்ட 11% வீழ்ச்சியடைந்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையேயான பயணங்களும் குறைந்துள்ளன.
இருப்பினும், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா இருதரப்பு உறவுகள் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.


