ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைவராக இருந்த பொன்னி குரோம்பி, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் (AGM) தலைமைப் பதவிக்கான வாக்கெடுப்பில் தனக்குக் கிடைத்த ஆதரவு குறைவு என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
இதன் மூலம், 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஒன்ராறியோ லிபரல் கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
கட்சியின் பொதுக்கூட்டத்தில், புதிய தலைமைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து பிரதிநிதிகளிடையே வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் 57 சதவீத பிரதிநிதிகள் புதிய தேர்தல் தேவையில்லை என்று வாக்களித்தனர்.
கட்சியின் சட்ட விதிகளின்படி, தலைவர் பதவியில் நீடிப்பதற்கு 50 சதவீதத்திற்கும் மேலான ஆதரவு போதுமானது.
இருப்பினும், கட்சியின் சில மூத்த உறுப்பினர்கள், குறைந்தபட்சம் 66 சதவீத ஆதரவு இல்லாவிட்டால் குரோம்பி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், “கட்சியின் எதிர்காலத்திற்கு ஒரு புதிய தலைமைத் தேர்தல் அவசியம் எனவும் இது தனது தனிப்பட்ட விருப்பத்தை விடவும், தனது அதிகாரத்தை விடவும் முக்கியமானது” என்றும் குரோம்பி தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தான் பதவியில் தொடர இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
