ஓட்டவா நகரில் 2022ஆம் ஆண்டு ஆறு பேரின் உயிரிழப்புக்குக் காரணமான தொழிற்சாலை வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, ஈஸ்ட்வே டேங்க் நிறுவனத்தின் உரிமையாளர் நீல் கிரீன் மீது காவல்துறை கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த வழக்கில், நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்தியதாக ஆறு பிரிவுகளின் கீழும், காயங்களை ஏற்படுத்தியதாக ஒரு பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி ஓட்டவாவில் உள்ள மெரிவேல் சாலையில் அமைந்திருந்த ஈஸ்ட்வே டேங்க், பம்ப் அண்ட் மீட்டர் (Eastway Tank, Pump and Meter) என்ற டேங்கர் டிரக் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இந்த வெடிப்பில், டேன்னி பீல், ரிக் பாஸ்டியன், காயலா ஃபெர்குசன், எட்டியென் மபியாலா, ரஸ்ஸல் மெக்லெலன் ஆகிய ஐந்து ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த மற்றொரு ஊழியர் மேட் கெர்னி, மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேவேளை, சக ஊழியரான டேனர் கிளெமென்ட் என்பவர் அந்த விபத்திலிருந்து காயங்களுடன் உயிர் தப்பினார்.
சம்பவம் நடந்த 3½ ஆண்டுகளுக்குப் பிறகு, நிறுவனத்தின் உரிமையாளரான நீல் கிரீன் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்த வெடிப்புச் சம்பவம் தொடர்பாக ஓட்டவா காவல்துறை உடனடியாக விசாரணை மேற்கொண்ட போதும், சட்ட சிக்கல்களும், வழக்கின் விசாரணையில் ஏற்பட்ட பிழைகளும் இந்த விசாரணையை பல மாதங்கள் தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.
