கியூபெக் மாகாணத்தில் மதச்சார்பின்மையை மேலும் வலுப்படுத்துவதற்காக ஒரு சுயாதீனக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை, முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையானது மதச் சின்னங்கள் மீதான தடையை, அரசு மானியம் பெறும் பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களுக்கும் (subsidized daycares) விரிவுபடுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.
இது பாகுபாடு நிறைந்தது என்றும், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளை மீறுகிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கனடா முஸ்லிம்கள் தேசிய சபையின் (National Council of Canadian Muslims) தலைவர் ஸ்டீபன் பிரவுன், “இந்த அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்து நாம் தீவிரமாகக் கேள்வி எழுப்ப வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்த 300 பக்க அறிக்கையானது, அரசாங்கத்தை நடுநிலையான ஒரு நிலைப்பாட்டில் செயல்படச் சொல்லாமல், மத நம்பிக்கை கொண்ட மக்களின் உரிமைகளைப் பறித்து, ஒற்றைத்தன்மையை (uniformity) அவர்கள் மீது திணிக்கப் பரிந்துரைப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
