கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த புதைகுழியில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் ஓகஸ்ட் மாதம் 3ஆம்திகதி பத்திரிகையில்
காணாமல் போனோர் அலுவலகத்தால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை என கேட்கப்பட்டதற்கமைவாக வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணி எஸ்.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது …
ஏற்கனவே பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இறுதி அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அத்தோடு சட்டவைத்திய அதிகாரி பிரணவன், வைத்தியர் வாசுதேவ ஆகியோரின் கூட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் ஓகஸ்ட் மாதம் 3 ஆம்திகதி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது மனித புதைகுழியில் எடுக்கப்பட்ட விடுதலை புலிகளின் தகட்டு இலக்கங்களோடு சம்பந்தப்பட்ட இலக்கங்கள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய உறவினர்கள் அல்லது அது தொடர்பில் தெரிந்தவர்கள் அது சமபந்தமாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தது.
அது தொடர்பான அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படாததற்கான காரணத்தினால் அவர்களுடைய உறவினர்கள் நீதிமன்றுக்கோ அல்லது காணாமல்போனோர் சட்டத்தரணிக்கோ அறிவிக்கும் பட்சத்தில் இந்த வழக்கை நாங்கள் எந்த காலப்பகுதிக்குள் நடந்தது, குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க இலகுவாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் 6ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. என கூறியிருந்தமை குறிப்பிடதக்கது.
