ஒட்டாவா டிரக் அணிவகுப்பு போராட்டத்தின் முக்கிய தலைவர்களான தமரா லிச் (Tamara Lich) மற்றும் கிறிஸ் பார்பர் (Chris Barber) ஆகியோருக்கு முறையே ஏழு மற்றும் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு, கனேடிய அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் கோரியுள்ளது.
இந்த தண்டனைக் கோரிக்கையை “கொடூரமான மற்றும் அசாதாரணமான தண்டனை” என்று பிரதிவாதிகள் தரப்பு கடுமையாக எதிர்த்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விசாரணையில், கிறிஸ் பார்பர் குழப்பம் விளைவித்தல் (mischief) மற்றும் நீதிமன்ற உத்தரவை மீற மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
தமரா லிச் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மட்டும் குற்றவாளி என கண்டறியப்பட்டார்.
2022 ஆம் ஆண்டு இவர்களால் ஒட்டாவாவில் முன்னெடுக்கப்பட்ட டிரக் அணிவகுப்பு போராட்டத்தின் காரணமாக லொறிகள் ஒட்டாவா நகரத்தை ஆக்கிரமித்தன.
இதனையடுத்து மூன்று வாரங்களுக்கும் மேலாக, ஒட்டாவா நகரத்தின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அதன் காரணமாக லட்சக்கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும், ஒட்டாவா குடியிருப்புவாசிகள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கனேடிய அரச தரப்பு, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமரா லிச் (Tamara Lich) மற்றும் கிறிஸ் பார்பர் (Chris Barber) ஆகிய இருவரும் அந்த போராட்டத்தின் முக்கிய தலைவர்களாக செயல்பட்டு, சட்டத்தை மீறி, ஒட்டாவா நகரத்தை முடக்கிய “தொடர்ச்சியான குற்றச் செயலுக்கு” பொறுப்பு என்று, கனேடிய அரச தரப்பு தனது வாதத்தை முன்வைத்துள்ளது.
இந்த வாதத்திற்கு எதிராக, கிறிஸ் பார்பரின் வழக்கறிஞர் டயான் மகாஸ் தமது வாதங்களை நீதிபதியின் முன்னால் சமர்ப்பித்துள்ளார்.
தமரா லிச்சின் வழக்கறிஞர் லாரன்ஸ் கிரீன்ஸ்பான் (Lawrence Greenspon) தமது தரப்பு வாதங்களை விரைவில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
