சஸ்காட்செவன் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்தில் பரவி வரும் காட்டுத்தீ, பியூவல் (Beauval) கிராமத்திற்குள் நுழைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேயர் ரிக் லலிபர்டே தெரிவித்துள்ளார்.
அதே வேளை, பியூவலுக்கு வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள படுனாக் (Patuanak) கிராமத்தில், ஒரே ஒரு சாலை மட்டுமே தீயினால் துண்டிக்கப்பட்டதால், சுமார் 700 பேர் சிக்கித் தவிக்கின்றனர்.
இதனால், அங்கு வான்வழி மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அருகிலுள்ள காட்டுத்தீயை அடுத்து, பியூவலுக்கு கடந்த வாரமே கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், உதவிப் பணியாளர்கள் மற்றும் அவசரகால முகாமைத்துவக் குழுவினர் அங்கேயே தங்கியிருந்தனர்.
காட்டுத்தீயானது கிராமத்தை அடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் அவர்கள் வெளியேறும்படி அழைக்கப்பட்டனர்.
அவசரகால செயல்பாட்டு மையத்தின் உறுப்பினர்கள் இன்னும் பியூவலில் தங்கி, தீயிலிருந்து கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளைப் பாதுகாக்க போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


