கனடாவின் கானனாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில், மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தை தணிக்க உலகத் தலைவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த உச்சிமாநாட்டிலிருந்து அவசரமாக வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில், வெளியிட்ட அந்த கூட்டறிக்கையில், மத்திய கிழக்கில் மோதல்கள் “தணிவதற்கான” அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கை இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை உறுதிப்படுத்துகின்றதுடன், ஈரானை “பிராந்திய ஸ்திரமின்மை மற்றும் பயங்கரவாதத்தின் முக்கிய ஆதாரம்” என்று குறிப்பிடுகின்றது.
இருப்பினும், “தற்போதைய நிலைமைக்கு ஒரு தீர்வு” காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் சர்வதேச எரிசக்தி சந்தைகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஜி7 தலைவர்கள் விழிப்புடன் இருப்பதாகவும், சந்தை ஸ்திரத்தன்மையை பாதுகாக்க கூட்டாகச் செயல்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதேவேளை, இஸ்ரேல்-ஈரான் நெருக்கடி குறித்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திடுவதற்கு, டொனால்ட் டிரம்ப் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
