ஒண்டாரியோ மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் February 27 ஆந் திகதி நடத்துவதாக ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இம்முறை நான்கு தமிழர்கள் குறித்த மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
ஒண்டாரியோ மாகாணத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிசார்பாக இம்முறை மூன்று தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில் மார்க்கம்-தோர்ன்ஹில் தொகுதியில் லோகன் கணபதி போட்டியிடவுள்ளதாக நவம்பர் 28, 2024 இல் கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
கன்சர்வேட்டிவ் கட்சிசார்பில் ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடும் மற்றுமொரு வேட்பாளரான விஜய் தணிகாசலம் டிசம்பர் 11, 2024 கட்சியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார் இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு முதல் மாகாணசபை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தட்ஷா நவநீதன் ஸ்கார்பரோ வடக்குத் தொகுதியில் போட்டியிடுகின்றார். இவர் 2023 ஆம் ஆண்டு ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் நடைபெற்ற ஒண்டாரியோ மாகாணசபை இடைத்தேர்தலில் NDP சார்பில் போட்டியிட்டவராவார்.
இத்தேர்தலில் நான்காவது தமிழ் வேட்பாளராக களமிறங்கும் ஜூட் அலோசியஸ் கன்சர்வேட்டிவ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி
ஸ்கார்பரோ-கில்ட்வுட் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எனவே, மேற்குறிப்பிட்டபடி இம்முறை ஒண்டாரியோ மாகாணசபைத் தேர்தலில் ஒண்டாரியோ PC சார்பில் மூன்று தமிழ் வேட்பாளர்களும் NDP கட்சி சார்பில் ஒருவருமாக நான்கு தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.