கியூபெக் மாகாண அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள தொழிற்சங்க நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்பான சட்டமானது
அரசியலமைப்பு அமைப்பிற்கு முற்றிலும் எதிரானது எனக் கூறி, அதை ரத்து செய்யக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கின் முன்னணி தொழிற்சங்க அமைப்பான தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (CSN) மாகாண உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
சமீபகாலமாக இப்புதிய சட்டத்திற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்க அமைப்புகளும் நீதிமன்றத்தை நாடி வரும் நிலையில், 'தேசிய
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் தற்போது இச்சட்டப் போராட்டத்தில் இணைந்துள்ளமை, கியூபெக் மாகாண அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கோலிஷான் அவனீர் கியூபெக் (CAQ) அரசாங்கம், மாகாணத்தில் இயங்கும் தொழிற்சங்கங்களின் செயல்பாடுகளை சீரமைக்கும் நோக்கிலேயே, இப்புதிய சட்டத்தைக் கொண்டுவந்ததாகத் தெரிவிக்கின்றது.
எனினும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், இச்சட்டம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாக தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
தொழிற்சங்கங்களின் அதிகாரத்தைக் குறைத்து, அவற்றின் கூட்டுப் பேரம் பேசும் திறனை முடக்குவதே அரசின் முதன்மை நோக்கம் எனத் தெரிவித்துள்ள தேசிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இது கனடிய அரசியலமைப்பு வழங்கியுள்ள கூடி இயங்கும் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயலாகும் எனக் குற்றம் சாட்டியுள்ளது.



