கியூபெக் மாகாணத்தில் உள்ள இரு முன்னணித் தனியார் கல்லூரிகள் எவ்வித முன்கூட்டிய அறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டதை அடுத்து, அங்கு கல்வி கற்று வந்த நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுப்பீரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal) மற்றும் அதன் சகோதர வளாகமான ‘கொலேஜ் சுப்பீரியர் டி ஷெர்புரூக்’ (Collège supérieur de Sherbrooke) ஆகிய இரு கல்வி நிறுவனங்களுமே திடீரென மூடப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாண கல்வி அமைச்சு இக்கல்லூரிகளுக்கான செயல்பாட்டு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்தமையே, இவை மூடப்பட்டமைக்கான காரணமாகும்.
இறுதியாண்டுப் பரீட்சைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையிலும், பலர் தங்களது படிப்பை முடித்து தொழிற்பயிற்சிகளை (Internships) ஆரம்பிக்கவிருந்த நிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் குறித்து திகைப்படைந்துள்ளனர்.
இதனையடுத்து தங்களுக்கு முறையான தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று காலை மொன்றியலில் மூடப்பட்ட கல்லூரி வளாகத்திற்கு முன்பாகத் திரண்டு மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
”கல்வி அமைச்சு அனுமதிப் பத்திரத்தை புதுப்பிக்க மறுத்ததால் கல்லூரி மூடப்படுகிறது என்பதைத் தவிர நிர்வாகத் தரப்பிலிருந்து வேறு எந்தத் தகவலும் முறையாகப் பகிரப்படவில்லை” என, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கியூபெக் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இக்கல்லூரிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
