கனடாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் குடிவரவு தொடர்பான வழக்குகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், Federal Court-இன் பணிச்சுமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதன் தலைமை நீதிபதி ஆலன் டைனர் தெரிவித்துள்ளார்.
விசா விண்ணப்பங்கள், அகதி கோரிக்கைகள், கனடாவுக்குள் அனுமதி, நாடுகடத்தல் உள்ளிட்ட பல்வேறு குடிவரவு விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை Federal Court விசாரித்து வருகிறது.
ஜூலை 6ஆம் தேதி Federal Court-இன் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஆலன் டைனர், தாம் 2014ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இணைந்தபோது ஆண்டுக்கு சுமார் 5,000 முதல் 6,000 குடிவரவு வழக்குகள் மட்டுமே பதிவாகியதாக தெரிவித்துள்ளார்.
எனினும், 2021ஆம் ஆண்டு முதல் வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அந்த ஆண்டில் சுமார் 9,700 குடிவரவு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மட்டும் அந்த எண்ணிக்கை 33,000-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையான காலப்பகுதியில் மட்டும் 14,000-க்கும் அதிகமான குடிவரவு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 28,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றி வருவதாக தெரிவித்த டைனர், இரவு நேரங்கள், வார இறுதிகள் மற்றும் விடுமுறை நாட்களிலும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
COVID-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் நிரந்தர மற்றும் தற்காலிக குடியேற்றங்களின் எண்ணிக்கையும், கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை குடிவரவு வழக்குகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட Bill C-12 எல்லைப் பாதுகாப்புச் சட்டமும் Federal Court-இன் பணிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டத்தின் கீழ், கனடாவுக்கு வந்த முதல் ஒரு ஆண்டுக்குள் அகதி கோரிக்கையை தாக்கல் செய்யாத சில நபர்களின் கோரிக்கைகளை Immigration and Refugee Board விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏற்கனவே அதிகரித்து வரும் குடிவரவு வழக்குகளுடன், Federal Court மேலும் அதிகமான நீதித்துறை மறுஆய்வு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் தற்போதைய வளங்கள் போதுமானதாக உள்ளதா என்பது தொடர்பில் புதிய கவலைகள் எழுந்துள்ளன.

