மொன்றியல் நகரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ‘யு.சி.ஐ’ (UCI) சர்வதேச வீதி சைக்கிளோட்டப் போட்டிகளின் போது, மொன்றியல் மாநகர சபை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் மாநகர சபை நிர்வாகத்துடனான கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப்போவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
மொன்றியல் தொழிலாளர்கள் சங்கம், மாநகர சபை நிர்வாகத்துடன் சுமார் 6,000 ஊழியர்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தத்திற்காக மே மாதம் முதல் இதுவரையில் சுமார் 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.
எனினும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பண ரீதியான கோரிக்கைகளில் மொன்றியல் மாநகர சபை நிர்வாகம் பிடிவாதமாக இருப்பதாக, தொழிற்சங்கத் தலைவர் நிக்கோலஸ் டி சிசியோ (Nicolas De Ciccio) குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சர்வதேசப் போட்டிக்குத் தயாராகும் வகையில் மொன்றியல் சாலைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தமக்கு வழங்காமல், மொன்றியல் மாநகர சபை நிர்வாகம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியிருப்பதையும் தொழிற்சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.

