தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பரந்தாமன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், த.வெ.க. அரசு பொறுப்பேற்றபோது புதிய யுகம் பிறப்பதாகக் கூறப்பட்ட போதிலும், கடந்த 100 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 546 குற்றச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பதாகக் சாடியுள்ளார்.
குறிப்பாக, போதைப்பொருள் புழக்கம் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்துக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் அளித்த கல்லூரி மாணவன் அமுதன் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தகவல் கொடுத்த மாணவனின் விபரத்தைக் காவல்துறையே போதை கும்பலிடம் கசியவிட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டைக் சுமத்தினார்.
மேலும், திருவொற்றியூரில் இரு அமைச்சர்கள் விரட்டியடிக்கப்பட்டது, தண்டையார்பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள், வேலூரில் பெண் காவலர் தாக்கப்பட்ட நிகழ்வு ஆகியவற்றை வரிசைப்படுத்தி, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சந்திசிரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையும் முதலமைச்சரும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய பரந்தாமன், தற்போதைய அரசைக் காட்டிலும் எதிர்க்கட்சியான திமுக மீதே மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
இளைஞர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய த.வெ.க. அரசை ‘சர்க்கஸ் சர்க்கார்’ எனக் கடுமையாக விமர்சித்த அவர், முதலமைச்சர் தனது பொறுப்பை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

