ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மாணவர்கள் மற்றும் அரசுப் பணிக்கு முயல்பவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அம்மாநில அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று முக்கிய தேர்வுகளை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வு (JSSC-CGL) மற்றும் 2014-ஆம் ஆண்டு முதல் வெளிமுகமை நிறுவனமான TDPL அமைப்பால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் அவைகளின் முடிவுகளும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுத் தேர்வுகளில் சி.பி.ஐ. விசாரணை கோரியும், முறைக்கேடு புகார்களுக்கு உள்ளான தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் முன்னெடுத்த போராட்டம் 24-ஆவது நாளை எட்டிய சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு போராட்டக்காரர்கள் தீவிர உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
அரசுப் பிரதிநிதிகளுக்கும் மாணவர் அமைப்புகளுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே அமைச்சரவையில் இம்முடிவு எட்டப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் பணி நியமனத் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்காகவும், தேவையான தேர்வுச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமிதாப் கௌஷல் தலைமையில் சிறப்புச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சோரன் அறிவித்துள்ளார்.
அரசின் இந்த அதிரடி முடிவால் பல வாரங்களாக நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

