மொன்றியல் நகரில், மக்களின் நடமாட்டம் மற்றும் வாகனங்களை ரகசியமாகக் கண்காணிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்புக் கேமரா குறித்த செய்தி, ஊடகங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே மொன்றியல் பொலிஸார் (SPVM) அதனை உடனடியாக அகற்றியுள்ளனர்.
பொதுமக்களின் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனியுரிமை குறித்த கவலைகளை எழுப்பியுள்ள இச்சம்பவம், மொன்றியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொன்றியலின் ரிவியேர்-டெஸ்-பிரேரீஸ் (Rivière-des-Prairies) பகுதியில் உள்ள ஹென்றி- பொராசா புலிவார்ட் வீதியின் விளக்குக் கம்பம் ஒன்றில், ரகசியமாகப் பொருத்தப்பட்டிருந்த இந்தக் கண்காணிப்புக் கேமராவை உள்நாட்டு ஊடகம் ஒன்று அடையாளம் கண்டு செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, குறித்த கேமராவை பொலிஸார் உடனடியாகக் கழற்றி அகற்றியுள்ளனர். அகற்றப்பட்ட சாதனம் மொன்றியலைச் சேர்ந்த ஜெனெடெக் (Genetec) தொழில்நுட்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கிளவுட்ரன்னர் CR-H2 (Cloudrunner CR-H2) என்ற அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமரா மாடல் என மொன்றியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.
வழக்கமான வாகன இலக்கத் தகடு வாசிப்பு சாதனங்களை (ALPR) விடவும் இது மிகவும் சக்திவாய்ந்தது என்று கூறப்படுகின்றது. மேலும், வாகனங்களின் இலக்கத் தகடுகளை மட்டுமன்றி, வாகனத்தின் நிறம், தயாரிப்பு நிறுவனம், ரகம், பயணிக்கும் வேகம் மற்றும் செல்லும் திசை என அனைத்து விபரங்களையும்
செயற்கை நுண்ணறிவு மூலம் துல்லியமாகச் சேகரித்துச் சேமிக்கும் திறன் படைத்ததாக இந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு கேமரா உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்த மொன்றியல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மார்க்-அன்டோயின் பெலாஞ்சர் (Marc-Antoine Bélanger), விசாரணை நடவடிக்கைக்காகவே இந்தக் கேமரா தற்காலிகமாகக் குத்தகை அடிப்படையில் பொருத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
மேலும், விசாரணைகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்காகவே கேமரா உடனடியாக அகற்றப்பட்டதாகவும், இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அந்த விசாரணை அதிகாரிகளால் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் மொன்றியல் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இத்தகைய கண்காணிப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில்வெளிப்படைத்தன்மை இல்லை என மனித உரிமை அமைப்புகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் (Ligue des droits et libertés) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் டொமினிக் பெஷார்ட் (Dominique Peschard) கருத்துத் தெரிவிக்கையில், பொதுமக்களுக்குத் தெரியாமல் செயற்கை நுண்ணறிவு மூலமான கண்காணிப்புகளை அதிகரிப்பது மக்களின் அடிப்படைத் தனியுரிமையை நேரடியாகப் பாதிக்கும்என எச்சரித்துள்ளார்.

