கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ரா (Pete Hoekstra) ஒட்டாவாவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட மேடையில், இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் வர்த்தக மற்றும் ராணுவ ரீதியான முரண்பாடுகளை வெளிப்படையாகப் பட்டியலிட்டு உரையாற்றியுள்ளார்.
கனேடிய மாகாணங்கள் அமெரிக்க மதுபானங்களுக்கு விதித்துள்ள தடைகள், முடங்கியுள்ள ‘கோர்டி ஹோவ்‘ சர்வதேசப் பாலம திறக்கப்பட வேண்டியமை மற்றும் 50 சதவீத அமெரிக்க எஃகு-அலுமினிய வரிவிதிப்பு ஆகிய முக்கிய வர்த்தகப் பூசல்களைக் குறிப்பிட்ட அமெரிக்கத் தூதர், இவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என கனேடிய அரசுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா விதித்த வர்த்தக வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஒன்ராறியோ உள்ளிட்ட சில மாகாணங்கள், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்களை தங்களது அரசு மதுபானக் கடைகளின் காட்சியறைப்பகுதிகளில் இருந்து நீக்கின.
இது குறித்து மேடையில் பேசிய தூதர் ஹூக்ஸ்ட்ரா, “அடுத்த ஆண்டு நாம் கொண்டாடும் சுதந்திர தின விழாவின் போது, ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டப்பூர்வமாக அமெரிக்க மதுபானத்தைக் கையில் ஏந்தி, மதுவிருந்து (Toast) சாப்பிட வேண்டும் என்பதே தனது தற்போதைய இலக்கு” என்று கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்புப் பேச்சுவார்த்தைகள் கடந்த 14 மாதங்களாக எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இன்றி முடங்கியுள்ள சூழலில், கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹூக்ஸ்ட்ராவின் இந்த உரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

