மொன்றியல் நகரில் கடமையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரி மொஹமட் லெமின் பென்ரெடோவனுக்கு (Mohamed Lamine Benredouane), நகரின் புகழ்பெற்ற ‘பெல் சென்டர்’ (Bell Centre) வளாகத்தில் எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பொது இறுதிச்சடங்கு (Civic Funeral) நடைபெறவுள்ளது.
மொன்றியல் மாநகரக் காவல்துறை (SPVM) இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி அன்று கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) சுற்றுப்புறத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பென்ரெடோவன், மிஷெல் மோஷே மிஸ்ராஹி என்ற பொதுமகன் மற்றும் அல்பர்ட்டாவைச் சேர்ந்த சந்தேக நபரான செத் ஸ்காட் ஹாட்ஃபீல்ட் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் ஒரு மொன்றியல் காவல்துறை அதிகாரி படுகாயமடைந்திருந்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரி பென்ரெடோவனுக்கு மூன்று வயதில் ஒரு குழந்தையும், தற்போது கர்ப்பமாக இருக்கும் மனைவியும் உள்ளனர்.
பொது இறுதிச்சடங்கிற்கு முன்னதாக, அதிகாரி பென்ரெடோவனின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்ற சிறிதளவிலான தனியார் மத வழிபாட்டுச் சடங்கு, கியூபெக் இஸ்லாமிய மையத்தில் (Islamic Centre of Quebec) நடத்தப்பட்டு, மொன்றியாலுக்கு வடக்கே உள்ள லாவல் (Laval) நகரில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பெல் சென்டரில் நடைபெறும் பொது இறுதிச்சடங்கு தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


